காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே புருஷோத்தமன் ( வயது 39 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மூர்த்தி தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அந்த கார் மீது புருஷோத்தமன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.