ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படம் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் அனந்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் பைசர் பள்ளத்தாக்கிற்கு 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர்.
குதிரை சவாரியை இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலா வந்த நேபாளம் மற்றும் ஐக்கிய அரசு அமீரக நாட்டை சேர்ந்த இருவர் இந்திய கடற்படை அதிகாரி உட்பட 28 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசரான் பகுதிக்கு செல்ல போதிய சாலை வசதி மற்றும் போக்குவரத்து இல்லாததால் அங்கிருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பைசரான் பகுதியில் இருந்தவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 12 பேர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் 4 பேரும் கைகளில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த போட்டோக்களை விசாரணை அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 4 பயங்கரவாதிகளில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவரின் பெயர் ஆசிப் பூஜி, மற்றொரு நபரின் பெயர் சுலைமான் ஷா, இன்னொரு நபரின் பெயர் அபு தல்ஹா என்பது தெரியவந்துள்ளது. இன்னொருவரின் பெயர், விபரங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 4 பேரும் லஷ்கள் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்புடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததும் உறுதியாகி உள்ளது. இந்த 4 பேரையும் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.