வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கணபதி நகர், ஜீவா நகர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இதற்கிடையே வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே  மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன்பு வாயிலில் அமர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து  வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்..