சீசன் தொடங்கியதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!!

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளும் மூடப்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, மெயின் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேகமூட்டங்களுடன் குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீசன் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.