தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி 7 வயது சிறுவன் பலியான சோகம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதரகண்ணன் ( வயது 45 )தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி மேலாளர். இவரது மனைவி கங்காதேவி .இவர்களுக்கு சஷ்வந்த் (வயது 7)என்ற மகன் உள்ளான். இவன் காரமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 3 -ம் வகுப்பு படித்து வந்தான். கங்காதேவியின் வீட்டுக்கு  அடிக்கடி அவரது தங்கை தனது கைக் குழந்தையுடன் வருவது வழக்கம் .அந்த குழந்தை தூங்குவதற்காக வீட்டில் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. அதில் ஏறி விளையாடுவதை சஷ்வந்த் வாடிக்கையாக வைத்திருந்தான். இந்த நிலையில் தாமோதர கண்ணன் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.மனைவி கங்கா தேவி அருகிலுள்ள கடைக்கு சென்று வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள தொட்டிலில் ஏறி சஷ்வந்த் விளையாடி கொண்டிருந்தான். திடீரென்று தொட்டில் கயிறு அவனது கழுத்தில் சிக்கி இறுக்கியது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் சஷ்வந்த் தவித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த தாமோதர கண்ணன் அதிர்ச்சி அடைந்து சஷ்வந்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.