திருச்சி போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சாத்தனூர் பகுதியில் உள்ள ஓலையூரை சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 34 இவர் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் ரோந்து பணியில் இரவு ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் காவிரி பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர் . அவர்களிடம் நீங்கள் யார் என்று ஏன் நிற்கிறீர்கள் என்று போலீஸ்காரர் அப்துல் காதர் விசாரித்தார். இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த
அரிவாலை எடுத்து போலீஸ்காரர் அப்துல்காதரை வெட்டினர் . இதில் ஒருவர் அவரது கழுத்துப் பகுதியிலும் மற்றொருவர் கைப்பகுதியிலும் வெட்டினர் . இதில் போலீஸ்காரர் அப்துல் காதர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் வெட்டிய இரண்டு ரவுடிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து அப்துல் காதர் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக அவரது மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை முன்பு சென்ற போது தானாக மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று போலீஸ்காரர் அப்துல் காதரையும் பின்னர் சம்பவ இடத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் அப்துல் காதரை அறிவாளால் வெட்டியது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பார்த்திபனின் மகன் சாரதி வயது 19 மற்றும் ஜெகநாதனின் மகன் சரவணன் என்ற புலி வயது 22 என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தேக படும்படியாக நின்றவர்களை விசாரித்த போலீஸ்காரர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..