அவிநாசியில் கார் மீது லாரி மோதி கோர விபத்து – துடிதுடித்து பலியான 3 கல்லூரி மாணவிகள்..

பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்த 3 கல்லூரி மாணவிகள், நேற்று நள்ளிரவு அவிநாசி அருகே வந்துக் கொண்டிருந்த போது லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி, கார் அப்பளமாய் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 கல்லூரி மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் 2 பேர் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள்கள் அபர்ணா (26), ஹேமா(21). அபர்ணா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்மில் 2ம் ஆண்டு எம்.பிஏ. படித்து வருகிறார். மற்றொரு மகளான ஹேமா கோவை தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., படித்து வருகிறார்.

கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த அபர்ணாவின் தோழி மோனிஷா (28) பெங்களூரில் படித்து வருகிறார். மோனிஷாவின் காரில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி நேற்று நள்ளிரவு வந்துக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே சிமெண்ட் கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவர்களது கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்களும் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அவிநாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். லாரி ஓட்டுநரான கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரியில் பயிலும் சகோதரிகள் 2 பேர் உட்பட 3 இளம்பெண்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.