சத்தியமங்கலத்தில் மொபட்டில் கஞ்சா கடத்திய இருவர் கைது- ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச் சென்று கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காலை போலீசார் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் வடக்குப்பேட்டை சந்தை கடை கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பு சுல்தான் சாலையில் இருந்து மொபட் வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி ஓடினர். இதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் துரத்தி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும், கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதும், தெரியவந்தது. இதில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் (27), வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனியை சேர்ந்த புவனேஸ்வரன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மொபட் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, இருவர் மீது வழக்கு பதிந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..