உதயநிதி துணை முதல்வர் ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கும் – திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி..!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி திருச்சி மத்திய பேருந்து நிலைய அருகில் ஃபெமினா ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது
இந்திய இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதும் தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்களை அபகரித்து செல்வதும் தொடர் கதையாகி வருகிறது. இது பற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு எத்தனையோ முறை அழுத்தம் கொடுத்தும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் தமிழன் என்றால் அவர்களுக்கு கிள்ளுக்கீரையாக தெரிகிறது.
இந்நிலையில் இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதித்ததுடன் அவர்களுக்கு மொட்டை அடித்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது இந்தியாவுக்கான அவமானம். இந்த சர்வதேச விதி மீறலை கண்டிக்கும் விதமாக இலங்கை தூதரை நேரில் வரவழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
மதுவுக்கு எதிராக ஆன்மிக தலைவர்கள் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தலைவர்களை அழைத்து மது ஒழிப்பு நிகழ்ச்சிகளை மனித நேய ஜனநாயக கட்சி நடத்தும். பூரண மது விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம். மதுக்கடைகள் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்கிறோம். அடுத்த ஓராண்டுக்குள் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு முன் வைக்கிறோம்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு முதல்வர், துணை முதல்வர் பதவி வழங்குவது அந்தந்த கட்சியின் உள் விவகாரம். உதயநிதிக்கு அதற்கான தகுதி உள்ளது. அவருக்கு துணை முதல்வர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால் மஜக வரவேற்கும். நடிகர் விஜய் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தது வரவேற்கக் கூடிய நிகழ்வு. சுயமரியாதைக்காரர் பெரியார் இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் நடத்த முடியாது. தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுயமரியாதையை கற்றுக் கொடுத்தவர் பெரியார் விஜய் அந்த வழியில் வந்தால் நாங்கள் வரவேற்போம். அதுபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் எந்த காலத்திலும் இந்தியாவில் சாத்தியமில்லை என்றார்.