திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். நாம் கேட்கிற கேள்விகளுக்கு கூட பாஜகவால் பதில் சொல்ல முடியவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா வேல்முருகன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமானவானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மாந்தரில் சாதி வகுப்பது சரியா வேல்முருகன்? மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு, சாதிய ரீதியாகவும் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்த உங்கள் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை” என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், “பெண் அமைச்சர் அடக்கமாக இருக்கவேண்டும்” எனவும், “தயிர் சாதம் சாப்பிடும் மாமி” எனவும் பொது வாழ்வில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது.
உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா வேல்முருகன்? எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்..