கோவில் திருவிழா தொடர்பாக சேலத்தில் வெடித்த வன்முறை… கடைகளுக்கு தீ வைப்பு… 3 மாவட்ட போலீசார் குவிப்பு.!!

சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அது மோதலாக மாறியது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு கற்களை வீசி தீ வைத்து கொளுத்தினர். இதில், பேக்கரி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு இரு தரப்பினரும் தீ வைத்தனர்.

கோவிலில் வழிபாடு நடத்த உரிமை கோரும் தரப்பினர் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. கல் வீசி போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

கோவில் விழா நடத்துவது மற்றும் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்.

மேலும் தீவட்டிப்பட்டி பகுதியில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பிடித்த கடைகளில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.