சோகத்தில் நிறைந்த வயநாடு… அடையாளம் தெரியாத 29 உடல்களும் 85 உடல் உறுப்புகளும்… ஒரே இடத்தில் அடக்கம்…

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே இடத்தில் வைத்து நல்லடக்கம் செய்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது.

வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 385 பேர் பலியாகிவிட்டனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 300- க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த மோசமான வானிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மணலும் தண்ணீரும் கலந்து பல இடங்கள் சேறாக காட்சியளிக்கின்றன.

அது போல் வீடுகள், கட்டட இடிபாடுகளிலும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா, இல்லை ஏதாவது உடல்கள் கிடைக்கின்றனவா என தேடி வருகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த இடங்களில் பல பகுதிகளில் சேறாகிவிட்டதால் அங்கு நடப்பதற்கே பேரிடர் குழுவினர் சிரமப்படுகிறார்கள். கெண்டை கால் அளவிற்கு அவர்களுடைய கால்கள் மண்ணில் உள்ளே புதைகிறது. இது போதாகுறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன.

தென் மேற்கு பருவமழை காரணமாக வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போனார்கள்.

முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அது போல் மண்ணில் யாரேனும் புதைந்துள்ளனரா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் வைத்து தேடும் பணிகள் நடந்தன. இந்த ஸ்கேனர் மூலம் 3 மீட்டர் ஆழம் அல்லது 12 அடி ஆழம் வரை பூமியில் இருப்பது தெரியவரும்.

ஆனால் நிலச்சரிவில் சிக்கி யாரும் உயிருடன் இருப்பதாகவும் சடலமாக இருப்பதாகவும் தெர்மல் ஸ்கேனரில் தெரியவில்லை. இந்த நிலையில் வயநாட்டை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என பாஜக தெரிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம்,. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அது போல் வீடில்லாத 100 பேருக்கு காங்கிரஸ் வீடு கட்டி தரும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் இதுவரை 219 உடல்களும் 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வயநாட்டில் புதுமலை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரு தினங்களில் 6 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர 29 உடல்கள், 85 உடல் உறுப்புகளும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மத பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இந்த உடல்களும் உடல் உறுப்புகளும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.