பலத்த இடி மின்லுடன் வெளுத்து வாங்கும் கனமழை… தத்தளிக்கும் சென்னை மக்கள்..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடாது இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி மதுரை, கோவை, மயிலாடுதுறை, கரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, கோயம்பேடு, வடபழனி, பூவிருந்தவல்லி, மணலி, மீனம்பாக்கம், அடையார், பாலவாக்கம், அண்ணாநகர் , பெரம்பூர் என சென்னையின் அனைத்துப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை புறநகர் மாவட்டங்களில் ஆவடி, அம்பத்தூர்,திருநின்றவூர், தாம்பரம், செம்பரம்பாக்கம், போரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, வண்டலூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

அதுவும் காற்று இல்லாமல் பலத்த இடி, மின்னலுடன் சன்னாமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

நேற்று இரவு முதல் அதிகாலை 4 மணி வரையில் சென்னையில் , அதிகபட்சமாக உத்தண்டியில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வடபழனி – 6 செ.மீ, நுங்கம்பாக்கம் – 6 செ.மீ, மீனம்பாக்கம் – 6 செ.மீ, அடையார் – 6 செ.மீ , வேளச்சேரி – 5.5 செ.மீ, சோழிங்கநல்லூர் – 5 செ.மீ, பாலவாக்கம் – 5 செ.மீ, ஐஸ் அவுஸ் – 5 செ.மீ, ராயப்பேட்டை – 5 செ.மீ, அண்ணாநகர் – 5 செ.மீ, பெரம்பூர் – 5 செ.மீ, பேசின் பாலம் – 5 செ.மீ, மணலி – 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் சென்னையில் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர வேறு எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவிதிருக்கிறது. அதேபோல், சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 8 மரங்கள் சாய்ந்ததாகவும், அவை அனைத்தும் உடனே அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.