மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் – 1.06 கோடி பெண் பயனாளிகள்.!!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இது மட்டுமின்றி ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவுள்ளதையொட்டி இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டன. ஒரு ரூபாயை அனுப்பிய உடன் பயனாளிகளின் கைப்பேசிக்கு இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில்  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளிருக்கு (திட்ட பயனாளிகளுக்கு) தொகையை கையாளுவது குறித்து கையேடு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

பணத்தை எப்படி சேமிப்பது? ஏடிஎம் அட்டை வைத்து செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து கையேடு வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வ மகள், பொன்மகள் சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றும் தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வாய்ப்பு திட்டத்தில் பணத்தை சேமிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.