ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது… உணர்த்துகிறது முத்தமிழ் முருகன் மாநாடு – தமிழிசை சௌந்தரராஜன்.!!

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் 42 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மீக பூமி தான். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதன் ஒரு யுக்தி தான் இது இதையும் அவர்கள் செய்து வைத்து இருக்கின்றனர். இதே போல எங்காவது சிறுபான்மை மாநாடு நடந்தால் அதை முதலமைச்சர் துவக்கி வைக்காமல் இருப்பாரா?

முதல்வர் போகாவிட்டாலும் உதயநிதியாவது துவக்கி வைத்து விடுவார். சேகர்பாபு ஆன்மீகத்துக்காகவே பிறந்தவர். ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மீக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மீகத்தின் பக்கம் தான் என்பதை காட்டுகின்றது. தமிழகத்தில் பெரியார் கொள்கையை சேர்ந்தவர்கள், பெரியாரின் கொள்கையையும் வழிபட்டு, அண்ணாவின் கொள்கையை பின்பற்றியவர்கள் ஆண்டாளையும் பின்பற்றியது வேண்டி இருக்கும். உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் முருக பக்தர்களுக்கு, எப்பொழுதும் இருக்கும் முருக பக்தர்கள் என்ற முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்தை பொறுத்தவரை இன்னும் பல நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் பல வேலைகளை கோயில்களில் செய்ய வேண்டியிருக்கிறது. பல கோவில்கள் மேம்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.

தவெக கொடியிலே இருப்பது வாகை பூவா, தூங்கு மூஞ்சி மரமா என்று தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சகோதரர் யானை அவர்களுக்கு சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துக்களை சொல்கிறார். விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சட்ட ரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும் விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்சி இருக்காது விமர்சையாக ஆரம்பித்தாரோ என்னவோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார். இன்னொரு கட்சியை துன்புறுத்தாமல் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ செய்து கொள்ளட்டும். பிரதமர் உக்கிரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என சொல்லி இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

பா.ஜ.க – திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து இருக்கிறது. மாற்று அரசியலை பா.ஜ.க முன்னெடுத்துச் செல்கிறது. திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது. அதிமுகவால் பாஜக வெற்றி பெற்றதா? பாஜகவால் அதிமுக வெற்றி பெற்றதா? என்பது ஒரு பெரிய விவாதம். ஆனால் கூட்டணி என வரும் பொழுது எங்களது உதவி இல்லக என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது. இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம்.

ஆளுநர் டெல்லி பயணம் அவரிடம் தான் கேட்க வேண்டும். முருகனை எதிர்த்தவர்கள், ராமனுக்கு செருப்பு மாலை போட்டவர்கள், ராமன்தான் எங்களுக்கு வழிகாட்டி என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். முருகனை எதிர்த்தவர்கள், முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டி இருக்கிறது. யாரெல்லாம் பாஜக, இந்து மத கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது என்பதுதான் முதல்வரின் மத்திய என்ற வார்த்தை காட்டுகிறது. முருகனை மிக கீழ் தரமாக சிலர் பேசினா். அப்போது நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்.சி.சி. கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளி கல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாலியல் சீண்டல் விவகாரங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும், அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மையான விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.