சின்னம் இருந்தா மட்டும் வெற்றி பெற முடியாது… சின்னம்மாவும் இருக்கணும்.. தஞ்சையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

க்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. எதிர்கட்சியான அதிமுகவால் ஒரு இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை.

சில தொகுதிகளில் பாஜக, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், ” அதிமுக அழிவதை இனியும் பார்க்க முடியாது. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு” சசிகலா அழைப்பு விடுத்தார்.

அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அ.தி.மு.க.வுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனவும், ஒன்றிணைவோம் வா எனவும் கூறியுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி, ” அதிமுகவில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். கட்டுகோப்பாக உள்ள அதிமுகவில் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் விஷம பிரசாரங்கள் எடுபடாது.” என்றார்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பரபரப்பான வால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சின்னம் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது? ‌ சின்னம்மா இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என கழக மாணவரணி நிர்வாகி இள.இளமாறன் அந்த வால் போஸ்டரை ஒட்டி உள்ளார்.இந்த வால்போஸ்டர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்,திருவையாறு , திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி , வல்லம் பகுதிகளில் இந்த வால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.