இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி…

ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் ஊழல் செய்வதே திமுகவின் சாதனை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;- ஊழல் வழக்கில் திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள். தற்போது 2 பேர் இன்னும் எத்தனை பேர் சிறை செல்லப்போகிறார்கள் என தெரியாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான். ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் ஊழல் செய்வதே திமுகவின் சாதனை. ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசு என்றால் இந்தியாவிலேயே அது திமுக அரசு மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரியும். வானிலை மையம் எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தியால் கனமழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பை சந்தித்தனர். ஆனால், தற்போதுள்ள அரசு அந்த அறிவிப்பைப் பொருட்படுத்தவே இல்லை. சரியான நேரத்தில் இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை மக்கள் இந்தளவுக்குத் துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

திமுக அரசு அம்மா உணவகங்களை மூடியதால் உணவு இல்லாமல் மக்கள் தவித்தனர். பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பொம்மை முதல்வர் ஆலோசனை வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். அதிகனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக அமைச்சர்கள் யாரும் வரவில்லை என மக்கள் தெரிவித்தனர். இப்போதும் அதே தான் நடந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்த முறையும் வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கையைத் தமிழ்நாடு அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான் இப்போது தென்தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியே குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் வரை நீடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. கருத்து வேற்றுமை கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.